சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர்களுக்கும், அவர்களுக்காக சுற்றிச்சுழன்று பணியாற்றிவரும் கழகத்தினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் பொய் மூட்டைகளுக்கும், பண மூட்டைகளுக்கும் இடையே புரட்சித்தலைவி அம்மாவின் லட்சியங்களை நெஞ்சில் ஏந்தி மன உறுதியோடு நாம் களத்தில் நிற்கிறோம்.
நிறைவேற்றவே முடியாது என்று தெரிந்தும் சட்டப்பேரவைத்தேர்தலில் வாய்க்கு வந்த வாக்குறுதிகளை எல்லாம் அள்ளிவீசி மக்களை தி.மு.க. ஏமாற்றியது.
4 ஆண்டுகளாக எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் உரிமைகளை, தமிழ்நாட்டு மக்களின் நலன்களை விட்டுக்கொடுத்தார். நீட் தேர்வில் விலக்கு பெறுவது உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட தோல்விகளை மறைக்க புதிதாக சமூகநீதி கூட்டமைப்பை மு.க.ஸ்டாலின் கையில் எடுத்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச்சாவடிகளைக் கைப்பற்றுதல், வாக்காளர்களை மிரட்டுதல் உள்ளிட்ட அனைத்து அராஜகங்களையும் செய்வதில் கைதேர்ந்த தி.மு.க. வினர் இப்போது ஆளுங்கட்சி என்ற அதிகாரத்தில் அவற்றையெல்லாம் இன்னும் கூடுதல் வேகத்தோடு செய்வார்கள். எனவே, நமது வேட்பாளர்களும் கழக நிர்வாகிகளும் வாக்குப் பதிவு நாளன்றும், வாக்கு எண்ணிக்கையின் போதும் கவனம் சிதறாமல் முழு விழிப்புணர்வோடு இருந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.