தமிழக செய்திகள்

திருவிழாக்களில் அரங்கேறும் அத்துமீறல்- கையில் சிகரெட், பீர் பாட்டிலுடன் பெண்கள் ஆபாச நடனம்

வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை தொடர்ந்து அதிகளவில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திருவிழாக்களில் ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடனங்கள் அரங்கேறி வருகிறது.

வேலூர்:

வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரை தொடர்ந்து அதிகளவில் திருவிழாக்கள் நடைபெறுகின்றன.

இந்த திருவிழாக்களில் சாமி ஊர்வலத்தின் போது கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், சாகச நிகழ்ச்சிகள், மேள வாத்தியங்கள் என பொதுமக்களுக்கு மகிழ்ச்சியூட்டும் பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தற்போது வேலூர் மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் திருவிழாக்களில் ஆடல் பாடல் என்ற பெயரில் ஆபாச நடனங்கள் அரங்கேறி வருகிறது.

நகர்ப்புறம் மட்டுமல்லாமல் கிராம பகுதிகளிலும் இந்த கலைநிகழ்ச்சி ஏட்டிக்கு போட்டியாக நடத்துகின்றனர்.

இதனை காண சுற்று வட்டார கிராமங்கள் மட்டுமின்றி வெளியூர்களிலிருந்தும் ஏராளமான இளைஞர்கள் வருகின்றனர்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி, ஆடல் பாடல் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இரவு 7 மணி அளவில் தொடங்கிய இந்த கலை நிகழ்ச்சி இரவு 10 மணி வரை நடந்தது.

இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 25 பேர் நடனமாடினர். இதனை காண்பதற்கு சுற்றுவட்டார கிராமங்களில் ஏராளமானோர் வந்திருந்தனர்.

இந்த நடன கலை நிகழ்ச்சியில் பெண்கள் அரை, குறை ஆடைகளுடன் ஆபாசமாக நடனமாடியது மட்டுமின்றி சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்றவற்றையும் செய்து காண்பித்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் முகம் சுழித்ததோடு, ஆபாசமாக இருப்பதாக கூறி நிகழ்ச்சியின் பாதியில் எழுந்து சென்றனர்.

தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரம் இருந்தும் போலீசார் அதனை கண்டும், காணாமல் இருந்தனர். மேலும் போலீசாரும் பார்வையாளர்கள் போல் நடன நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு அருகில் நின்று ஆபாசமாக நடனத்தை கண்டு ரசித்தனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறுகையில் :-

திருவிழாவில் இரவு நேர கலை நிகழ்ச்சிகளாக தெருக்கூத்து நாடகம், வில்லுப்பாட்டு, இன்னிசை கச்சேரி போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தனர். ஆனால் தற்போது 'ரெக்கார்டு டான்ஸ்' என அழைக்கப்படும் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சியும் அதிகளவில் நடத்தப்படுகிறது.

திருவிழாவையொட்டி நடத்தப்பட்ட இந்த நடன நிகழ்ச்சியில் பக்தி பாடல்கள் மற்றும் பாரம்பரிய விழிப்புணர் பாடல்கள் இடம் பெற்றிருக்கும் என நம்பி வந்தோம்.

ஆனால் இங்கு ஆபாச நடன நிகழ்ச்சி மட்டுமே நடந்தது. பெண்களே கையில் போதை பொருட்களை கையில் வைத்து சிகரெட் பிடிப்பது, மது குடிப்பது போன்று அநாகரிகமாக நடனமாடினர்.

இது போன்ற நடன நிகழ்ச்சிகளால் அடுத்த தலைமுறை போதைப் பழக்கத்திற்கு ஆளாகும் அபாயநிலை உள்ளது என்றனர்.