காதல் பிரச்சினையில் 3 பேருக்கு சரமாரியாக கத்திக்குத்து 
தமிழ்நாடு செய்திகள்

ஒரு பெண்ணுக்கு இரண்டு பேர் போட்டி- காதல் பிரச்சினையில் 3 பேருக்கு சரமாரியாக கத்திக்குத்து

திருப்பூர் அருகே காதல் பிரச்சினையில் 3 பேர் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் ஆண்டிபாளையம் அடுத்த முல்லை நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில், ஹரி என்ற இருவரும் அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதில் செந்தில் என்பவர் காதலித்த பெண்ணை சக்திவேல் என்பவரும் காதலித்துள்ளார்.

இதையடுத்து சக்திவேலிடம் பேச செந்தில், ஹரி இருவரும் அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது சக்திவேலின் தாயார் மட்டும் இருந்த சூழலில் அவரை தள்ளிவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சக்திவேலின் தாயார் அழைத்த உடன் சக்திவேல், அஜித் சகோதரர்கள் இருவரும் பனியன் துணி வெட்டும் லே கட்டிங் கத்தியை கொண்டு செந்தில் ,ஹரி இருவரையும் தாக்கியுள்ளனர்.

அந்த வழியாகச் சென்ற ராஜ்குமார் என்பவரும் இதனை கண்டு தடுக்க முயன்றுள்ளார். அப்போது செந்தில் ,ஹரி இருவரும் தப்பிய நிலையில் ராஜ்குமார் அவர்களிடத்தில் சிக்கி உள்ளார். அவரை துரத்தித் துரத்தி சகோதரர்கள் இருவரும் கடுமையாக தாக்கியுள்ளனர்.

முதுகு, வயிறு என பல இடங்களில் கத்திக்குத்து வாங்கிய ராஜ்குமார் தப்பிக்க அருகில் இருந்த பைக் கன்சல்டிங் கடையில் தஞ்சம் புகுந்தார். விடாமல் துரத்திய சகோதரர்கள் கடைக்குள் புகுந்து ராஜ்குமாரை தாக்க முயன்றனர். ஆனால் கடை உரிமையாளர்கள் அவர்களை தடுத்து உடனடியாக கடை கதவுகளை மூடியதால் ராஜ்குமார் உயிர்தப்பினார். எனினும் விடாமல் கத்தியுடன் சகோதரர்கள் வாக்குவாதம் செய்தனர். அவர்களை பேசி அனுப்பி வைத்துவிட்டு காயம்பட்ட இளைஞரை இருசக்கர வாகனம் மூலம் மருத்துவமனைக்கு கடை உரிமையாளர்கள் அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள திருப்பூர் மத்திய காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கத்தியுடன் பட்டப்பகலில் துரத்தித் துரத்தி இளைஞர்களை தாக்கிய சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அஜித், கார்த்திக், ஹரி ஆகிய 3 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.