நெல்லை:
நெல்லை தாழையூத்தை அடுத்த நாராணம்மாள் புரத்தை சேர்ந்தவர் செல்லப்பா (வயது 48). விவசாயி.
இவர் இன்று தனது மனைவி மரியபுஷ்பத்துடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது கலெக்டர் அலுவலகம் முன்று திடீரென தன் உடலில் மண்எண்ணையை ஊற்றினார்.
இதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்தனர். அவர்கள் உடனே செல்லப்பாவிடம் இருந்த மண்ணெய் கேனை பறித்தனர். மேலும் அவர் மீது தண்ணீர் ஊற்றினர்.
பின்னர் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது செல்லப்பா கூறியதாவது:-
எனக்கு சொந்தமாக மானூர் வட்டப்பகுதியில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. அதனை சிலர் போலி பத்திரம் மூலம் அபகரித்து கொண்டனர். இதனை மீட்டுதரக்கோரி ஏற்கனவே மனு கொடுத்துள்ளேன். ஆனால் இதுவரை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவேதான் இன்று தீக்குளிக்க முயன்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் அவருக்கு அறிவுரைகள் கூறினர். உங்களது கோரிக்கைகள் குறித்து மனு எழுதி அதிகாரிகளிடம் கொடுக்குமாறு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தில் கலெக்டர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.