செய்துங்கநல்லூர்:
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் பிரான்சிஸ் சேவியர்(வயது 55). கடந்த மாதம் 25-ந் தேதி அலுவலகத்தில் இருந்த இவரை மணல் கடத்தல் கும்பல் வெட்டிக்கொலை செய்தது.
இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு, கலியாவூர் வேதக்கோவில் தெருவை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்ற ராமசுப்பு (41) மற்றும் மாரிமுத்து (31) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு கோரிக்கை விடுத்தார். அதன்பேரில் அவர்கள் இருவரையும் குண்டாசில் கைது செய்ய கலெக்டருக்கு எஸ்.பி. பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார். அதனை ஏற்று 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் செந்தில் ராஜ் உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர்கள் இருவரும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.