தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள். 
தமிழக செய்திகள்

கத்தியுடன் பள்ளிக்கு வரும் மாணவர்கள்- பாதுகாப்பு கோரி கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் போராட்டம்

பள்ளி மாணவர்கள் கத்தியுடன் வருவதால் பாதுகாப்புக் கோரி ஆசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.

மாலை மலர்

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் தேவாரம், தேவதானப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவதால் அச்சமடைந்தனர். இதனால் பாதுகாப்புக்கோரி தேனி முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில் தேவாரம் பள்ளியில் புத்தகம் கொண்டுவர கூறிய ஆசிரியரை மாணவர் தாக்கியுள்ளார். ஜி.கல்லுப்பட்டியில் மாணவர்கள் ஒன்றுகூடி ஆசிரியர்களை கிண்டல் செய்துள்ளனர்.

மேலும் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர் கத்தியுடன் வகுப்புக்குள் வந்து ஆசிரியரை குத்த முயன்றார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், டி.எஸ்.பி. மாணவரை விசாரித்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் பள்ளிக்கு கத்தியுடன் வந்து போலீசார் முன்னிலையிலேயே ஆசிரியருக்கு கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.

இதனால் தற்போது ஆசிரியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அனைத்து ஆசிரியர் சங்கங்களும் இணைந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றனர்.