தமிழக செய்திகள்

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த ஆசிரியர் தற்கொலை

சாய்குமார் ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்ததால் சோகமாக இருந்துள்ளார். தற்கொலை குறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திருப்பூர்:

திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கேட்டு தோட்டம் பகுதியில் ரெயில் தண்டவாளத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

இதில் இறந்தவர் ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த சாய்குமார் (வயது 32) என்பதும், இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

அவர் ஆன்லைன் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்ததால் சோகமாக இருந்துள்ளார். மேலும் சொந்த ஊரில் உள்ள தனது குடும்பத்தினரிடம் தனக்கு பண தேவை உள்ளது. அனுப்பி வைக்குமாறும் இல்லையென்றால் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்வதாக செல்போனில் பேசி உள்ளார்.

இந்தநிலையில் அவர் திருப்பூர் வந்து ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.