தமிழக செய்திகள்

முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று அ.தி.மு.க.வினர் அவைக்குள் வர சபாநாயகர் அனுமதி

அதிமுக எம்எல்ஏக்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டது.பிரதான எதிர்க்கட்சி தனது கருத்துகளை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சென்னை :

தமிழக சட்டசபையின் 2-ம் நாள் அமர்வு தொடங்கியதும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக அதிமுக, பாமக, பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அமைதியாக இருக்குமாறு சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்திய பின்னும் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சி துணை தலைவர் உதயகுமார் உட்பட அதிமுக உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். இதனால் அதிமுக எம்எல்ஏக்கள் இன்றைய கூட்டத்தில் பங்கேற்க இயலாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், அவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:- கள்ளச்சாராயத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். சட்டசபையில் அதிமுக எம்எல்ஏக்கள் நாடகத்தை அரங்கேற்றி சென்றுள்ளனர். மானிய கோரிக்கை மீதான விவாதம் காலை, மாலை என நடைபெற உள்ள நிலையில் வெளியேற்றப்பட்டவர்கள் வினாக்கள்-விடைகள் நேரம் முடிந்த பின்னரே வெளியேற்றப்பட்டவர்கள் அனுமதிக்கப்படலாம் என்றும் பிரதான எதிர்க்கட்சி தனது கருத்துகளை பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் பெருந்தன்மையோடு, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட தண்டனையை ரத்து செய்து மீண்டும் அவைக்கு வரவழைத்து கள்ளக்குறிச்சி தொடர்பாக கொண்டு வரப்பட உள்ள சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் கலந்து கொண்டு பேசலாம் என கூறினார்.