தமிழ்நாடு செய்திகள்

காவிரி விவகாரத்தில் தமிழகம்-கர்நாடகா இடையே சுமூக தீர்வை ஏற்படுத்த வேண்டும்: கர்நாடக மந்திரி பேட்டி

கர்நாடகத்தில் மழை இல்லாதது தான் காவிரி பிரச்சினைக்கு காரணம்.காங்கிரஸ் ஆட்சிக்கும் காவிரி பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை.

மாலை மலர்

சென்னை:

கர்நாடக மாநில கைவினை பொருள்கள் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள காவிரி-கர்நாடக மாநில கலை மற்றும் கைவினை பொருள்கள் விற்பனை மையம் தொடக்க விழா நடைபெற்றது.

தமிழ்நாடு சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மற்றும் கர்நாடக அரசின் சிறு தொழில்கள், பொது நிறுவனங்கள் துறை அமைச்சர் சரணபசப்பா தர்ஷனபுர ஆகியோர் கலந்து கொண்டு புதிய கடையை தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து கர்நாடக அமைச்சர் சரணபசப்பா தர்ஷனபுர நிருபர்களிடம் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மழை இல்லாதது தான் காவிரி பிரச்சினைக்கு காரணம்.

இரண்டு மாநிலங்களும் தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கர்நாடகாவில் 19 மாவட்டங்கள் தண்ணீர் இல்லாமல் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் ஆட்சிக்கும் காவிரி பிரச்சினைக்கும் சம்பந்தம் இல்லை. கடந்த ஆண்டு மழை இருந்தது. தண்ணீர் பிரச்சினை இல்லை. இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை மழை இல்லை. இது தான் பாதிப்புக்கு காரணம்.

தண்ணீர் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை இரு மாநிலங்களும் அணுகி உள்ளோம். நீதி மன்ற உத்தரவை பின்பற்றுவோம்.

காவிரி பிரச்சினை தொடர்பாக இரு மாநில அரசுகள் பேச வேண்டிய அவசியம் இல்லை.

காவிரி பிரச்சினை குறித்து இரண்டு மாநிலங்களுடன் பேச வேண்டியதும், தீர்க்க வேண்டியதும் மத்திய அரசின் கடமை. அதனை மத்திய அரசு தான் செய்ய வேண்டும். அந்த பொறுப்பு மத்திய அரசுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.