சரத்குமார் 
தமிழக செய்திகள்

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - சரத்குமார் வலியுறுத்தல்

தமிழக மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.

மாலை மலர்

சென்னை:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கடந்த 18 மற்றும் 19-ந்தேதி எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 55 தமிழக மீனவர்களை, கச்சத்தீவு அருகேயுள்ள நெடுந்தீவில் இலங்கை கடற்படையினர் சிறைப்படுத்தி, அவர்களது 8 விசைப்படகுகளை கைப்பற்றி, ஜனவரி 3-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என்ற உத்தரவின்படி, யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மத்திய அரசு, உடனடியாக இலங்கை சிறையில் அடைபட்டிருக்கும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யவும், அவர்களது விசைப்படகுகளை மீட்கவும் இலங்கை அரசிடம் பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழக அரசு பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்ப வாழ்வாதார தேவைக்கு உதவ வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் இன்னலுக்கு உள்ளாகும் இந்த அவலநிலைக்கு மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பேச்சுவார்த்தை நடத்தி, நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தி இப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.