தமிழ்நாடு செய்திகள்

சமயபுரம் கோவிலுக்கு குழந்தைகளுடன் வரும் பெண்களின் துயர் துடைக்கும் வினோத அணுகுமுறையை கையாளும் போலீசார்

பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய அணுகுமுறையை இன்ஸ்பெக்டர் கருணாகரன் பின்பற்றினார். கையில் குழந்தையுடன் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யும் தாய்மார்களின் துயர் துடைக்கும் வகையில் சமயபுரம் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

Suresh K Jangir

மண்ணச்சநல்லூர்:

அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவிலாகும். தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், அம்மனை தரிசனம் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர். விசேஷ மற்றும் விடுமுறை நாட்களில் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்கின்றனர்.

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். இதற்கிடையே சபரிமலை செல்லும் பக்தர்களும், வேண்டுதல் நிறைவேற நடைபயணம் செய்து வரும் பக்தர்களும் அதிகளவில் கோவிலுக்கு வருகை தருகிறார்கள்.

இந்தநிலையில் குழந்தைகளுடன் வரும் பெண்கள் அவதிக்குள்ளாவதை கண்ட சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசீலன், முதல்நிலை காவலர் பாண்டியராஜன் உள்ளிட்ட போலீசார் இதற்கு ஒரு தீர்வு காண முடிவு செய்தனர்.

அதன்படி பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய அணுகுமுறையை இன்ஸ்பெக்டர் கருணாகரன் பின்பற்றினார். கையில் குழந்தையுடன் நீண்ட வரிசையில் சென்று சாமி தரிசனம் செய்யும் தாய்மார்களின் துயர் துடைக்கும் வகையில் சமயபுரம் போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து குழந்தைகளுடன் வரும் பெண்கள், குழந்தைகளுக்கு உணவு ஊட்ட தேவையான வசதிகள் மற்றும் குழந்தைகளுக்கு பொழுது போக்குவதற்கான விளையாட்டுப் பொருட்கள், பொழுதுபோக்குடன் கல்வியையும் கற்றுக்கொள்ள வசதியாக சிலேட்டுகளையும் வாங்கி கொடுத்து அதற்கென ஒரு தனி இடம் ஏற்பாடு செய்து வைத்துள்ளனர்.

வித்தியாசமான இந்த அணுகுமுறை பொதுமக்களின் பாராட்டையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.