தமிழ்நாடு செய்திகள்

உடன்குடி பகுதி கிராமங்களில் வடியாத வெள்ளம்

உடன்குடியில் இருந்து நெல்லைக்கு நேரடி போக்குவரத்து இதுவரை தொடங்கவில்லை.சுற்றுப்புற பகுதி மக்கள் இன்று கடும் அவதிப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.

மாலை மலர்

உடன்குடி:

உடன்குடி அருகே உள்ள சடையனேரிகுளம் கனமழையால் உடைந்து சுமார் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் சடையநேரி குளத்தில் ஏற்பட்ட உடைப்பு முழுமையாக அடைக்கப்பட்டது.

குளம் உடைப்பால் பாதிக்கப்பட்ட பரமன்குறிச்சி கஸ்பா, வெள்ளாளன்விளை, சீயோன்நகர், வட்டன் விளை, மருதூர்கரை ஆகிய கிராமங்களில் இன்றும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது. வெள்ள நீர் வடிவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் உடன்குடியில் இருந்து நெல்லைக்கு நேரடி போக்குவரத்து இதுவரை தொடங்கவில்லை. தொடர் விடுமுறைக்கு பின் அரசு அலுவலகங்கள் அனைத்தும் இன்று திறந்து செயல்படுவதால், நேரடி போக்குவரத்து வசதி இல்லாமல் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் உடன்குடி மற்றும் சுற்றுப்புற பகுதி மக்கள் இன்று கடும் அவதிப்படுவதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர்.