தமிழ்நாடு செய்திகள்

சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு மறியல்... ஆர்.பி.உதயகுமார் கைது

சுங்கச்சாவடியை முற்றுகையிடுவதற்காக ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளுடன் வந்தார். போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

Maalaimalar

திருமங்கலம்:

கப்பலூர் சுங்கச்சாவடியை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இன்று திருமங்கலத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

இதற்கிடையே கடந்த வாரம் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.பி.உதயகுமார் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். அப்போது அவரை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில் இன்றும் சுங்கச்சாவடியை முற்றுகையிடுவதற்காக ஆர்.பி.உதயகுமார் நிர்வாகிகளுடன் வந்தார். அவரை தடுத்து நிறுத்திய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அது தோல்வியில் முடிந்த நிலையில் ஆர்.பி.உதயகுமார் சுங்கச்சாவடி அருகே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார். இதையடுத்து அவரை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். அப்போது போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.