பொள்ளாச்சியில் கொட்டப்பட்ட மருத்துவக்கழிவுகள் 
தமிழ்நாடு செய்திகள்

பொள்ளாச்சியில் மருத்துவக் கழிவுகள் கொட்ட வந்த ஆட்டோ சிறைபிடிப்பு

சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் காலாவதியான மாத்திரை மற்றும் டானிக் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் இருந்தது தெரியவந்தது.

மாலை மலர்

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி-கோவை சாலையில் தனியார் மண்டபம் எதிரில் ஆட்டோ ஒன்று சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் ஆட்டோ அருகே சென்று பார்த்தனர். அப்போது ஆட்டோவில் மூட்டை மூட்டையாக மருத்துவ கழிவுகள் இருந்தது.

இதனால் அதிர்ச்சியான மக்கள் அந்த ஆட்டோவை சிறைபிடித்தனர்.மேலும் பொள்ளாச்சி தாலுகா போலீஸ் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் ஆட்டோவில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் ஆட்டோவை ஓட்டி வந்தது மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் மாரிமுத்து என்பது தெரியவந்தது.

மேலும் இவர்கள் பொள்ளாச்சி- கோவை சாலையில் உள்ள ஒரு வீட்டிலிருந்து இந்த மருத்துவ கழிவுகளை கொட்ட சொல்லி ஆட்டோவில் அனுப்பி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவில் இருந்த மருத்துவ கழிவுகளை கைப்பற்றிய போலீசார் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் காலாவதியான மாத்திரை மற்றும் டானிக் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் இருந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து ஆட்டோவையும், ஆட்டோவை இயக்கி வந்த மணிகண்டன் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த மாரிமுத்து ஆகிய 2 பேரையும் தாலுகா போலீஸ் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.