சென்னை:
தமிழகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுவதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் நேற்று மாலையில் இருந்து உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
இதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய பேனர்கள், சுவரொட்டிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகள் அடங்கிய புகைப்படங்கள் முழுமையாக அப்புறப்படுத்தப்பட்டன.
அதே நேரத்தில் பொது இடங்களில் செய்யப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுவர்களில் பொறுத்தப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் விளம்பர பேனர்களை தேர்தல் பணியாளர்கள் கிழித்து அப்புறப்படுத்தினார்கள். சென்னை மாநகரம் முழுவதும் அரசியல் கட்சிகளின் விளம்பர பேனர்களை அகற்றும் பணியில் நூற்றுக்கணக்கான தேர்தல் பணியாளர்கள் இன்று ஈடுபட்டனர். சாலையோரமாக உள்ள கட்டிட சுவர்களில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுமே தங்களது கட்சி சார்ந்த பேனர்களை சுவர்களில் ஒட்டியிருந்தனர். இது போன்ற பேனர்கள் அனைத்தும் இன்று அகற்றப்பட்டன.