தமிழக செய்திகள்

நாடு முழுவதும் வேலைவாய்ப்பு மேளா- 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர்

தமிழகத்தில் சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் நடந்த விழாவில் 884 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடந்த விழாவில் 646 பேருக்கு மத்திய அரசு அதிகாரிகள் புதிய பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

மாலை மலர்

சென்னை:

ஆண்டுக்கு 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு பணிகளில் புதிய வேலைவாய்ப்பு வழங்கும் ரோஸ்கர் மேளா என்ற புதிய திட்டத்தின் மூலம் இன்று 6-வது கட்டமாக 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

இந்த திட்டத்தை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்து புதிய பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்தியா முழுவதும் 43 இடங்களில் இந்த திட்டத்தின் கீழ் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் நடந்த விழாவில் 884 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.

சென்னை தியாகராய நகரில் உள்ள வாணி மகாலில் நடந்த விழாவில் 646 பேருக்கு மத்திய அரசு அதிகாரிகள் புதிய பணி நியமன ஆணைகளை வழங்கினர்.

திருச்சியில் நடந்த விழாவில் 238 பேருக்கு மத்திய மந்திரி எல்.முருகன் புதிய பணி நியமன ஆணைகளை வழங்கினார். 11 பொதுத்துறை வங்கிகள், வருவாய்த்துறை, பாதுகாப்பு அமைச்சகம், துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி அமைச்சகம், ரெயில்வே, தபால்துறை, சுங்கம் மற்றும் வீட்டுவசதி, நகர்ப்புற விவகார துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.