தமிழ்நாடு செய்திகள்

காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க குவிந்த கூட்டம்

வஞ்சிரம், வவ்வால், பாறை, சங்கரா, இறால், பால் சுறா உள்ளிட்ட மீன்கள் அதிகமாக விற்பனைக்கு வந்திருந்தன. மீன்கள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை.

மாலை மலர்

ராயபுரம்:

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் விரதம் இருந்து அசைவம் சாப்பிடாமல் இருப்பது வழக்கம். இதற்கிடையே கடந்த செவ்வாய்க்கிழமையுடன் புரட்டாசி மாதம் முடிவடைந்தது.

இதைத்தொடர்ந்து புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒரு மாத விரதத்துக்கு பின்னர் ஏராளமானோர் குவிந்ததால் மீன் விற்பனை களைகட்டியது.

இன்று காலை 110 விசை படகுகள் வரை கரைக்கு திரும்பியதால் பெரிய வகை, சிறிய வகை மீன்கள் வரத்து அதிகமாக காணப்பட்டது. வஞ்சிரம், வவ்வால், பாறை, சங்கரா, இறால், பால் சுறா உள்ளிட்ட மீன்கள் அதிகமாக விற்பனைக்கு வந்திருந்தன. மீன்கள் விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. கடந்த வாரம் கிலோ ரூ. 350 விற்கப்பட்ட நண்டு இன்று ரூ.500 வரை கூடுதல் விலைக்கு விற்கப்பட்டது. வஞ்சிரம்-ரூ.700, சங்கரா-ரூ.400-க்கு விற்பனை ஆனது.

புரட்டாசி மாதம் முடிந்தாலும் நவராத்திரி விழா தற்போது நடைபெற்று வருவதால் அதிகமானோர் இன்னும் அசைவம் சாப்பிடுவதை தவிர்த்து வருகிறார்கள். எனவே நவராத்திரி விழா முடிந்த பிறகு மீன்கள் விலை அதிகரிக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் கோழி, ஆடு இறைச்சி கடைகளிலும் வழக்கத்தை விட இன்று வியாபாரம் அதிகம் இருந்தது. புரட்டாசி மாதத்திற்கு பிறகு இறைச்சி வியாபாரம் பழைய நிலைக்கு வந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

காசிமேடு மார்க்கெட்டில் மீன்கள் விலை (கிலோவில்) பட்டியல்:-

வஞ்சிரம் - ரூ.700

வவ்வா - ரூ.450

கடமா - ரூ.450

இறால் - ரூ.400

சங்கரா பெரியது - ரூ.400

நண்டு - ரூ.500