தமிழ்நாடு செய்திகள்

71-வது பிறந்த நாள்: மு.க.ஸ்டாலினுக்கு நீண்ட கியூவில் நின்று வாழ்த்து தெரிவித்த தொண்டர்கள்

தொண்டர்களின் வாழ்த்துகளை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்றார்.தொண்டர்கள், பிரமுகர்கள் ஒவ்வொருவரும் மாலைகள், புத்தகங்கள், பழக்கூடைகள் மற்றும் நினைவு பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.

மாலை மலர்

சென்னை:

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு இன்று 71-வது பிறந்த நாள். இதையொட்டி அவருக்கு வாழ்த்து சொல்ல அண்ணா அறிவாலயத்திலும் அவரது வீட்டு முன்பும் ஏராளமான தொண்டர்கள் காலையிலேயே குவிந்திருந்தனர்.

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காலையில் எழுந்ததும் வீட்டில் இருந்த கலைஞரின் படத்துக்கு மாலை அணிவித்து வணங்கி விட்டு குடும்பத்தாருடன் 'கேக்' வெட்டினார்.

 அவருக்கு மனைவி துர்கா, மகன் உதயநிதி ஸ்டாலின், மகள் செந்தாமரை மற்றும் குடும்பத்தினர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரைக்கு சென்று அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.

 இதைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பெரியார் திடலில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி வரவேற்று வாழ்த்து தெரிவித்தார். மேளதாளம் முழங்க அங்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு எம்.பி, ஆ.ராசா, அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரிய சாமி, எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சக்கர பாணி, அன்பில் மகேஷ், சென்னை மேயர் பிரியா, பரந்தாமன், புழல் நாராயணன், மதன் மோகன் மேற்கு மாவட்ட கழக செயலாளர் நே.சிற்றரசு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும் உடன் வந்திருந்தனர். கலைஞர் நினைவிடத்தில் அவரது உதவியாளர் கே.நித்யா நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அவருடன் தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன் மற்றும் நிர்வாகிகளும் வாழ்த்து தெரிவித்தனர்.

இதன் பிறகு தொண்டர்களின் வாழ்த்துகளை பெறுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயம் சென்றார். அங்கு அவருக்கு மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலைய செயலாளர்கள் பூச்சி முருகன், துரை முருகன், காஜா உள்ளிட்டோர் வாசலில் நின்று வரவேற்றனர்.

சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் நே.சிற்றரசு ஏற்பாட்டில் 'கேக்' கொண்டு வரப்பட்டது. அதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகள் மத்தியில் 'கேக்' வெட்டி வழங்கினார். அதன் பிறகு கலைஞர் அரங்கிற்கு சென்று தொண்டர்களின் வாழ்த்துக்களை பெற்றார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசன்,நடிகர் விஜய் ஆகியோரும் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தனர். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சென்று வாழ்த்தியவர்கள் வருமாறு:-

அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ. அன்பரசன், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, தியாகராய நகர் எம்.எல்.ஏ.ஜெ.கருணாநிதி, ஐட்ரீம் மூர்த்தி, அம்பத்தூர் ஜோசப் சாமுவேல், ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, எழும்பூர் பரந்தாமன் மற்றும் படப்பை மனோகரன், வி.எஸ்.ராஜ், ஐ.கென்னடி, மா.பா.அன்பு துரை, தாயகம் கவி எம்.எல்.ஏ, பாலவாக்கம் விசுவநாதன், சென்னை மேற்கு மாவட்ட தி.மு.க. மாணவரணி மாவட்ட அமைப்பாளர் துபாய் வி.ஆர்.விஜய், முக்கூடல் பேரூராட்சி தலைவர் ராதா, துணைத் தலைவர் லட்சுமணன் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள், வாழ்த்து தெரிவித்தனர். தொண்டர்கள், பிரமுகர்கள் ஒவ்வொருவரும் மாலைகள், புத்தகங்கள், பழக்கூடைகள் மற்றும் நினைவு பரிசுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கினார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாற்காலியில் அமர்ந்தபடி தொண்டர்களிடம் வாழ்த்துகளை பெற்றார். நீண்ட கியூ வரிசையில் நின்று தொண்டர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.