கன்னியாகுமரி:
கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலி துறை கடற்கரை பகுதியில் அமைந்துள்ள சுனாமி நினைவு பூங்காவையொட்டி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் 34 கடைகள் கட்டப்பட்டு உள்ளது. இந்த கடைகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அதன் அடிப்படையில் இன்று காலை 9 மணி அளவில் இந்த கடைகளை அகற்றுவதற்காக ஜே.சி.பி. மற்றும் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டன. இதை அறிந்த நூற்றுக்கணக்கான வியாபாரிகள் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தங்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வரும் இந்த கடைகளை அகற்றக் கூடாது என்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து அங்கு போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதற்கிடையில் அங்கு திரண்டிருந்த வியாபாரிகள் கடைகளை அகற்றினால் நாங்கள் கடலில் குதித்து தற்கொலை செய்வோம் அல்லது தீக்குளித்து தற்கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்தனர். தொடர்ந்து கன்னியாகுமரி தீயணைக்கும் படை வீரர்களும் வரவழைக்கப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஞானசேகர் கண்காணிப்பாளர் செந்தில் குமார், பொறியாளர்கள் ராஜ்குமார், அய்யப்பன், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதைத்தொடர்ந்து வியாபாரிகளை அப்புறப் படுத்த போலீசார் முயன்றனர் அப்போது சில வியாபாரிகள் அங்கு இருந்து தப்பி ஓடினார்கள். அவர்களை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். பின்னர் 10.30 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடைகளை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.