கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அன்று மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டு 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் உயிரிழந்தனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுவை விசாரித்து வந்த நீதிபதிகள் இன்று காலை தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்து இருந்தனர்.
அதன்படி, மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி. பாலாஜி அமர்வு வழங்கியது. அதில், கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டனர்.