பெரியகுளம்:
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கோடை வாசஸ்தலங்களுக்கும், முக்கிய சுற்றுலா தலங்களுக்கும் படையெடுத்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கும்பக்கரை, சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் அதிகமானோர் வந்து செல்லும் பகுதியாக உள்ளது.
இதே போல் மேகமலை, ஹைவேவிஸ் வனப்பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தபிறகு கடந்த மாதம் முதல் கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கினர். தினசரி நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.
உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகையால் இப்பகுதியில் சுற்றுலா தொழிலை நம்பி வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தேனி மாவட்டத்திலும் கடுமையான கோடை வெப்பம் நிலவி வந்த போதிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் குறைந்த அளவு தண்ணீரே வருகிறது.
அதில் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்வதுடன் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். கோடை மழை கை கொடுக்கும் பட்சத்தில் அருவிக்கு நீர் வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.