கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுபா நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 43).
மதுரை அருகே உசிலம்பட்டி சின்ன நத்தம் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி பிரபா சிபோரா (40). கோவில்பட்டி அருகே உள்ள திருவேங்கடத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது குடும்பத்தினருடன், ராஜபாளையத்தை சேர்ந்த உறவினர்களுடன் நேற்று மாலை 3 மணியளவில் வீட்டை பூட்டிவிட்டு, நெல்லைக்கு ஜவுளி எடுக்க சென்றனர். பின்னர் மீண்டும் இரவு 8 மணி அளவில் வீட்டுக்கு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த ஜவுளிகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
மேலும் பீரோ மற்றும் அலமாரியில் இருந்த சதீஷ்குமாருக்கு சொந்தமான 50 பவுன் தங்க நகை மற்றும் ராஜபாளையத்தை சேர்ந்த அவரது உறவினரான பாபு சந்திரபிரகாஷ் என்பவரின் மனைவி பிரியரூபாவதிக்கு சொந்தமான 50 பவுன் தங்க நகை என மொத்தம் 100 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த தகவலின் பேரில், டி.எஸ்.பி. வெங்கடேஷ் தலைமையில் மேற்கு போலீஸ் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த தடயங்களை ஆய்வு செய்தனர். மேலும் மோப்ப நாய் வரவைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தனிப்படை போலீசார் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.