போராட்டத்துக்கு படகில் செல்லும் மீனவர்கள் 
தமிழக செய்திகள்

காட்டுப்பள்ளியில் 2-வது நாளாக போராட்டம்- மீனவர்கள் கடல் வழியாக படகில் சென்று துறைமுகம் முற்றுகை

பழவேற்காடு கடற்கரை பகுதியில் உள்ள 16 கிராம மக்கள் நேற்று துறைமுக நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

மாலை மலர்

பொன்னேரி:

மீஞ்சூர் அடுத்த காட்டுப்பள்ளியில் தனியார் துறைமுகம், கப்பல் கட்டும் தளம் இயங்கிவருகிறது.

கடந்த 2008-ம் ஆண்டு இந்த பகுதியில் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்காக இங்கு இருந்த மீனவ கிராம மக்களை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். வாழ்வாதாரம் பாதித்த கடலோரகிராம மீனவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து 1750 மீனவர்களுக்கு துறைமுகம், கப்பல் கட்டும் தளத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக 250 பேருக்கு வேலை வழங்கி கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர்.

மீதமுள்ள 1500 பேருக்கு அனைவருக்கும் வேலைவாய்ப்பு நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணி நிரந்தரம் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பழவேற்காடு கடற்கரை பகுதியில் உள்ள 16 கிராம மக்கள் நேற்று துறைமுக நுழைவு வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்த நிலையில் இன்று காலை 100-க்கும் மேற்பட்ட படகில் கருப்புக்கொடி ஏந்தி மீனவர்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் காட்டுப்பள்ளி துறைமுகத்தை முற்றுகையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.