திருச்செந்தூர்:
திருச்செந்தூர் தெற்கு புதுத்தெருவை சேர்ந்தவர் வெள்ளையன் (வயது 56). இவர் திருச்செந்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வெள்ளையன் சமையல் செய்துகொண்டு இருந்தபோது, அதே ஓட்டலில் மேலாளராக பணியாற்றி வரும் திருச்செந்தூர் டி.ஆர்.நகரை சேர்ந்த பாலமுருகன் சமையலறைக்குள் வந்தார்.
அவர் வடகறியில் உப்பு அதிகமாக உள்ளதாக கூறி, வெள்ளையனை சத்தம் போட்டார். அதற்கு வெள்ளையன், உப்பு சரியாக தான் உள்ளது என்று கூறி உள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த பாலமுருகன் அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த எண்ணெயை சில்வர் பாத்திரத்தில் எடுத்து, வெள்ளையன் மீது ஊற்றினார். இதில் உடல் முழுவதும் வெந்து காயம் ஏற்பட்டது.
உடனடியாக அவரை சக ஊழியர்கள் மீட்டு திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் பாலமுருகன் மீது அவதூறாக பேசி கையால் தாக்குதல், கொலை மிரட்டல், கொலை முயற்சி ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.