தமிழக செய்திகள்

கடலூரில் இடியுடன் பலத்த மழை

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதிகாரிகள் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணித்து வருகிறார்கள்.

கடலூர்:

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை இன்று (29-ந்தேதி) தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. அதன்படி இன்று வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்தது.

இதன் காரணமாக தென்பெண்ணை ஆறு, கெடிலம், கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கால் சிதம்பரம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது. இதுதவிர கடலூர் மாவட்டத்தில் தொடர்கனமழை காரணமாக ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளின் ஒட்டுமொத்த வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக கடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை முதல் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால் அதிகாரிகள் விடுப்பு எடுக்காமல் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், விளைநிலங்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகத்தினர் கண்காணித்து வருகிறார்கள். இதுதவிர வீராணம், பெருமாள் ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.