கைது 
தமிழக செய்திகள்

வீட்டில் அடைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியார் கைது

திண்டிவனம் அருகே ஆட்டோவில் கடத்தி வீட்டில் அடைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த போலி சாமியாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

திண்டிவனம்:

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. 10ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார்.

கடந்த 13-ந் தேதி அவரது தாய் திட்டியதால் சிறுமி கோபித்து கொண்டு வீட்டிலிருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து 15-ந் தேதி சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த சிறுமி கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. சிறுமி வீட்டிலிருந்து வெளியேறிய போது, எடுத்துச் சென்ற செல்போன் எண்ணை வைத்து போலீசார் தகவல் சேகரித்தனர். அப்போது அந்த சிறுமி செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது.

அதன் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா தலைமையிலான போலீசார் ஆத்தூர் புவனேஸ்வரி நகரில் இருந்த சிறுமியைமீட்டனர். சிறுமியை கடத்திச்சென்றது தொடர்பாக செய்யூர் அருகே எடையாத்தூரைச் சேர்ந்த எல்லப்பன், (39), என்பவரை கைது செய்தனர்.

இவருக்கு உடந்தையாக இருந்ததாக தொழுப்பேடு அருகே சிறு பெரும்பூண்டியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரபு (35), ஆத்தூர் புவனேஸ்வரி நகரைச் சேர்ந்த சின்ன பையன் (50) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் எல்லப்பன் அந்த பகுதியில் மாந்தீரிக பூஜை செய்வதாகவும் தன்னை சாமியார் என கூறி வந்து உள்ளார்.

சம்பவத்தன்று வீட்டை வீட்டு வெளியேறிய சிறுமி, கீழ்ஆதனூரில் தனியாக நின்றார். அப்போது அந்த வழியாக ஆட் டோவில் வந்த போலி சாமியார் எல்லப்பன், சிறுமியிடம் பேசி ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து சிறுபெரும் பூண்டி கிராமத்தில் உள்ள ஆட்டோ டிரைவரான நண்பர் அப்பு என்கிற பிரபு வீட்டில் சிறுமியை 5 நாட்களாக அடைத்து வைத்துள்ளார்.

பின்னர் எல்லப்பன் சிறுமியை அழைத்துக்கொண்டு தனது உறவினரான ஆத்தூர் புவனேஸ்வரி நகரில் வசிக்கும் சின்ன பையன் என்பவர் வீட்டில் 5 நாட்களுக்கு மேல் அடைத்துவைத்துள்ளார். அங்கு சிறுமியை போலி சாமியார் பாலியல் பலாத்காரம் செய்தார்.

மேற்கண்டவை விசாரணையில் தெரியவந்தது.கைது செய்யப்பட்ட எல்லப்பன், பிரபு, சின்னபையன் ஆகியோர் மீது போலீசார் ’போக்சோ’ பிரிவின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்தனர். கைதான அவர்கள் திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.