மின்சாரம் தாக்கி பலியான யானையை காணலாம் 
தமிழக செய்திகள்

கூடலூர் அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி

யானையின் உடலை கால்நடை டாக்டர்கள் முன்னிலையில் வனத்துறையினர் உடற்கூராய்வு செய்து வருகின்றனர்.

மாலை மலர்

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த விலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து விடுகின்றன. அவ்வாறு நுழையும் வனவிலங்குகள் அட்டகாசத்தில் ஈடுபடுவது வழக்கம். வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து விடாமல் இருக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு மேற்கொள்கின்றனர்.

இதுதவிர வனவிலங்குகளுக்கு யாரும் தொந்தரவு கொடுக்க வேண்டாம் என மக்களுக்கும் அறிவுரை கூறி வருகின்றனர்.

கூடலூர் அடுத்த பாடந்தொரையில் ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது.

இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து இறந்து கிடந்த யானையினை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் யானை உணவு தேடி வனத்தை விட்டு வெளியேறி தோட்ட பகுதியை நோக்கி வந்துள்ளது. அப்போது தோட்டத்திற்குள் புகுந்த யானையின் மீது மின்சாரம் தாக்கியதும், அதனால் யானை இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து யானையின் உடலை கால்நடை டாக்டர்கள் முன்னிலையில் வனத்துறையினர் உடற்கூராய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.