திருப்பூர்:
திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக அருணாச்சலம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பாண்டியன் நகரில் அமைந்துள்ள அம்மா திடலில் இன்று (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு பிரமாண்ட பொதுக்கூட்டம் நடக்கிறது.
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அருணாச்சலத்திற்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.
15 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திடலில் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. கூட்டத்தில் கட்சி பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் திரளாக கலந்து கொள்கின்றனர்.