தமிழக செய்திகள்

தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்- வானதி சீனிவாசன்

மற்றொரு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார்.ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க பொன்முடி மேற்கொண்ட முயற்சிகளை குறிப்பிட்டு ஐகோர்ட்டே அதிர்ச்சி தெரிவித்தது.

கோவை:

பாரதிய ஜனதா மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தற்போது தண்டனை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி மீதான மற்றொரு சொத்து குவிப்பு வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதை திடீரென வேலூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி 2022-ல் சென்னை ஐகோர்ட்டு, அலுவல் ரீதியான உத்தரவை பிறப்பித்தது. அதை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார்.

இது பெரும் சர்ச்சையான நிலையில், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் தான் மற்றொரு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார். ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தி ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க பொன்முடி மேற்கொண்ட முயற்சிகளை குறிப்பிட்டு ஐகோர்ட்டே அதிர்ச்சி தெரிவித்தது.

 தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது அவர் மீதான ஊழல் வழக்கை, பெங்களூருவுக்கு மாற்ற தி.மு.க. தொடர்ந்த வழக்கே காரணம். இப்போது தி.மு.க அரசில் அமைச்சர்களாக உள்ள பலர் மீது ஊழல் வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே, ஏற்கெனவே தி.மு.க.வே உருவாக்கிய முன்னுதாரணத்தின் படி தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை, தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத வேறொரு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அவர் நிருபர்களிடம் கூறுகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றபோது அவரை பதவியில் இருந்து நீக்காமல், இலாகா இல்லாத அமைச்சராக இன்று வரை தொடரச் செய்து வருகின்றனர். இது மிகப்பெரிய அவமானம். குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் அனைவரையும் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, மாநிலத்தின் முதலமைச்சர், தான் நடத்துவது நேர்மையான ஆட்சி என்பதை நிரூபிக்க வேண்டும். நீதித்துறையில் நல்ல நபர்கள், எதற்கும் பயம் இல்லாத நபர்கள் இருக்கும் போது நல்ல தீர்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றார்.

SCROLL FOR NEXT