பாப்பாரப்பட்டி:
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, பாப்பாரப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி விளைநிலங்களில் புகுந்து காட்டு யானைகள் விளைப்பயிர்களை சேதப்படுத்தி வந்தது.
இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அச்சமடைந்திருந்தனர். காட்டு யானைகள் விரட்டியடிக்கும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையி்ல் அச்சுறுத்தி வந்த காட்டுயானைகளை பிடிக்க வனத்துறையினர் தி்ட்டமிட்டு, ஆனைமலை யானைகள் முகாமிலிருந்து சின்னதம்பி என்ற கும்கி யானையினை இரண்டு நாட்களுக்கு முன்னர் பாப்பாரப்பட்டிக்கு வரவழைத்தனர்.
பின்னர் காட்டு யானைகளை பிடிக்கும் பணியினை வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
மூன்றாவது நாளான இன்று காலை பெரியூர் அருகே ஈச்சம்பள்ளம் வனப்பகுதியில் சுற்றிதிரிந்த இரண்டு காட்டு யானைகளில் ஒரு காட்டு யானைக்கு மயக்க ஊசி செலுத்தியுள்ளனர்.
யானை மயக்கமடைந்ததும் கும்கி யானை உதவியுடன் காட்டு யானையினை தயாராக இருந்த வாகனத்தில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் ஏற்றி முதுமலை காப்பு காட்டிற்கு கொண்டு சென்று விட்டனர்.