திருச்செந்தூர் கோவிலில் தரிசனத்திற்காக நீண்ட வரிசையில் காத்து நின்ற பக்தர்கள். 
தமிழக செய்திகள்

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று கோவிலில் குவிந்தனர்.

திருச்செந்தூர்:

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில் நடை இன்று அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது.

4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது.

தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இன்று கோவிலில் குவிந்தனர்.

கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ரூ.100 கட்டணம் மற்றும் பொது தரிசனத்தில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தரிசன கவுண்டர்களில் குடிதண்ணீர் வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில் உள்பிரகாரத்தில் கண்ணாடி முன்பு பல வகையான பழங்கள் வைக்கப்பட்டு விசு கனி தரிசனம் வைக்கப்பட்டுள்ளது. இதனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காலை 10 மணிக்கு மேல் சண்முகருக்கு அன்னாபிஷேகமும், மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும் நடந்தது. மாலை 3 மணிக்கு பிரதோ‌ஷ அபிஷேகமும் 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.

மேலும் கோவில் கலையரங்கத்தில் வைத்து ஆன்மிக சொற்பொழிவு, பக்தி இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

SCROLL FOR NEXT