அரோக்கணம் நெமிலி தாலுகா கீழவீதி கிராமத்தில் மண்டியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த மயிலேறு நிகழ்ச்சியின்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் முத்துகுமார் (39), பூபாலன் (40), ஜோதிபாபு (19) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சுமார் 8-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை புன்னை மருத்துவமனைக்கும், அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். மேலும் சிலருக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக நெமிலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த சம்பவத்தில் பணப்பாக்கத்தை சேர்ந்த கிரேன் ஓட்டுநர் முருகன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.