சென்னை:
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மாநகர பஸ்களில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்யாதவாறு பஸ்களில் ஏறும் போதும், பயணம் செய்யும் போதும், பாதுகாப்பான விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் கடைபிடிக்க வேண்டிய நிலையான நெறிமுறைகள் ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தப்பட்ட நிலையில் ஒரு சில பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டு பயணம் தொடருவதால் மீண்டும் கீழ்க்கண்ட இயக்க நெறிமுறைகளை கடைபிடிக்க வலியுறுத்தப்படுகிறது.
வழித்தடங்களில் ஏதேனும் மாணவர்கள் படியில் தொங்க நேரிட்டாலோ அல்லது உயிருக்கு பாதுகாப்பாற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ அந்த பஸ்சை நிறுத்தி படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தை தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.
மாணவர்கள், டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களின் அறிவுரையை கேட்காமல் மீறி செயல்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பஸ்சை இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கோ அல்லது போலீஸ் அவசர அழைப்பு 100 எண்ணுக்கோ மற்றும் மாநகர போக்குவரத்து வான்தந்தி பிரிவுக்கும் தகவல் தெரிவித்து புகார் அளித்திட வேண்டும்.
பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது டிரைவர் மற்றும் கண்டக்டர்களின் பொறுப்பு என்பதனை உணர்ந்து பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.