தமிழக செய்திகள்

கோவையில் பிரதமர் ரோடு ஷோ: பள்ளி மாணவர்கள் சீருடையுடன் பங்கேற்றதால் சர்ச்சை- விசாரணைக்கு கலெக்டர் உத்தரவு

தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கோவை:

கோவையில் நேற்று பிரதமர் மோடி பங்கேற்ற பிரமாண்ட வாகன பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜ.கவினர், பொதுமக்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

இவர்களுடன் பள்ளி சீருடை அணிந்த சில மாணவ-மாணவிகளும் மோடியை காண வரிசையாக நின்றனர். அவர்களுடன் ஆசிரியர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.

தேர்தல் பிரசாரத்தில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது. அதனையும் மீறி பிரதமர் மோடி நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்கச் செய்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிராந்திகுமார் பாடி கூறும்போது, பிரதமர் நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்கள் அழைத்து வரப்பட்டனரா என்பது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மாணவர்கள் பள்ளி முடிந்து வீடு திரும்பும் வழியில் மோடியை பார்க்க அங்கு நின்றார்களா அல்லது அவர்களை யாராவது அழைத்து வந்திருந்தார்களா என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

SCROLL FOR NEXT