தமிழக செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்... பொற்கொடிக்கு ஆறுதல் தெரிவித்தார்

அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சென்னை:

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு படுகொலை செய்யப்பட்டார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல்கள் மற்றும் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெரம்பூர் செம்பியம் பந்தர் கார்டன் மாநகராட்சிப் பள்ளி மைதானத்தில் வைக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு, பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இதைத்தொடர்ந்து பொத்தூர் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். இல்லத்தில் வைக்கப்பட்டு இருந்த ஆம்ஸ்ட்ராங்கின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது நடந்த சம்பவம் பற்றி பொற்கொடி விரிவாக எடுத்துக் கூறினார்.

இதையடுத்து, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், அனைவரும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என பொற்கொடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

இதற்காக இன்று காலை தலைமை செயலகத்தில் இருந்து அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.