தமிழக செய்திகள்

"நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை..." பாடலை பாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவன். பாடகி சுசீலாவின் பாடல்களை நான் எப்போதும் வெளியூருக்கு காரில் செல்லும் போது காரில் போட்டு கேட்டுக்கொண்டே செல்வேன்.

மாலை மலர்

சென்னை:

தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் வேந்தரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

இன்று இசைப் பல்கலைக்கழகம் சார்பில் பத்மபூஷன் பி.சுசீலா, பி.எம்.சுந்தரம் என 2 இசை மேதைகளுக்கு டாக்டர் பட்டம் கொடுத்து பெருமைப்படுத்தி உள்ளோம்.

இதன் மூலம் டாக்டர் பட்டமும் பெருமை அடைகிறது. பாடகி சுசீலாவின் குரலில் மயங்காதவர்களே இருக்க முடியாது. அதில் நானும் ஒருவன். அவரது பாடல்களை நான் எப்போதும் வெளியூருக்கு காரில் செல்லும் போது காரில் போட்டு கேட்டுக்கொண்டே செல்வேன். எனக்கு ரொம்ப பிடித்த பாட்டு. அதை அடிக்கடி நான் பாடியும் இருக்கிறேன்.

நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை. உன் நினைவில்லாத இதயத்திலே சிந்தனை இல்லை.

காயும் நிலா வானில் வந்தால் கண் உறங்கவில்லை.

உன்னை கண்டு கொண்ட நாள் முதலாய் பெண் உறங்கவில்லை.

அதனால்தான் மேடைக்கு வந்த உடனே அம்மையாரை பார்த்த உடனே வணக்கம் சொல்லி விட்டு நான் உங்கள் ரசிகன் என்று சொன்னேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக டாக்டர் பட்டம் வாங்க மேடைக்கு வந்த பி.சுசீலா முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கையை பிடிக்க முயன்றபோது தடுமாறி இருக்கையில் அமர்ந்தார். அருகில் இருந்த அமைச்சர்கள் அவரை தாங்கி பிடித்தனர்.