சென்னை:
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் கடந்த மாதம் 24-ந்தேதி மரணம் அடைந்தார்.
வயது மூப்பின் காரணமாக உயிர் இழந்த அவரின் சாம்பலை ஓ.பன்னீர் செல்வம் கங்கையில் கரைக்க சமீபத்தில் சென்றார்.
தாய் இறந்ததை தொடர்ந்து அவர் கட்சி பணிகளை தவிர்த்து வீட்டில் இருந்து வந்தார். பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் இருந்து வந்தார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவு குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், பிரமுகர்கள் நேரிலும், தொலைபேசி மூலமும் விசாரித்தனர்.
இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பகல் 12.30 மணி அளவில் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து தாயார் மறைவு குறித்து விசாரித்தார். சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வந்த முதலமைச்சரை மூத்த நிர்வாகிகள் அழைத்து சென்றனர்.
ஓ.பன்னீர் செல்வத்திடம் மு.க.ஸ்டாலின் துக்கம் விசாரித்தார். 10 நிமிடங்கள் அவர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் இருந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் சென்று இருந்தார்.
வீட்டில் இருந்து மு.க.ஸ்டாலின் புறப்பட்ட போது அவரை வாசல் வரை வந்து ஓ.பன்னீர் செல்வம் வழியனுப்பி வைத்தார்.