சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், மேல்சேவூர்(ம) அம்மன் குளத்துமேடு கிராமத்தில் நேற்று அரசு பேருந்து சாலை வளைவைக் கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணம் செய்த அம்மன் குளத்துமேடு கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் குமார் (வயது 16) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் பலத்த காயமடைந்து விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் வீனேஷ் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கும் அவருடைய உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.