சென்னை:
சென்னை நகரில் உள்ள பள்ளி மாணவர்களில் 5 பேரில் ஒருவர் உடல் பருமனாகவும், அதிக எடை கொண்டவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
தனியார் குழந்தைகள் மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவமனை ஆகியவை பள்ளி மாணவ-மாணவிகளின் உடல் எடை குறித்து ஆய்வு நடத்தியது. 5 வயது முதல் 17 வயது வரை உள்ள 1,124 மாணவ-மாணவிகளிடம் உடல் எடை மற்றும் உயரம் கணக்கிடும் பி.எம்.ஐ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 584 பேர் மாணவிகள் ஆவார்கள்.
இந்த ஆய்வில் 40 சதவீத மாணவ-மாணவிகள் வயதுக்கு மிஞ்சிய கூடுதல் எடையுடன் உடல் பருமனாக இருப்பது தெரியவந்துள்ளது. 667 பேருக்கு (59.43 சதவீதம்) உடல் எடை இயல்பாக இருக்கிறது. 237 பேர் (21.08 சதவீதம்) அதிக எடையிலும், 220 பேர் (19.5 சதவீதம்) உடல் பருமனாகவும் உள்ளனர்.
அதிக எடை அல்லது உடல் பருமன் பாதிப்பு இந்தியாவில் உள்ள பல பள்ளி ஆய்வுகளில் காணப்பட்டதைவிட இது அதிகமாக உள்ளது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
துரித உணவு பழக்கமே (பாஸ்ட்புட்) உடல் குண்டாவதற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறும்போது, "உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை, துரித உணவுகளை அதிகப்படியாக பயன்படுத்துவது, செல்போன் உள்ளிட்ட மின்னணு பொருட்களை அதிகமாக பயன்படுத்துவது, வீடுகளில் இருந்து வாகனங்களிலேயே பள்ளிக்கு செல்வது உள்ளிட்ட காரணங்கள் பள்ளி மாணவ-மாணவிகளின் உடல் எடை அதிகரிப்புக்கு வழிவகுத்தது" என்றார்.