தமிழ்நாடு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாட்கள் சிகிச்சை

ஐ.சி.யு. சிகிச்சை பிரிவில் இருந்த செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.செந்தில் பாலாஜிக்கு திட உணவுகள் வழங்குவதாகவும், நடைபயிற்சி அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்பட்டது.

மாலை மலர்

சென்னை:

அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

நெஞ்சு வலிப்பதாக கூறியதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதாக டாக்டர்கள் பரிசோதனையில் தெரிவித்தனர்.

இதையடுத்து கோர்ட்டு அனுமதியின் பேரில் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த வாரம் அவருக்கு பைபாஸ் சர்ஜரி நடத்தப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

அதைத் தொடர்ந்து ஐ.சி.யு. சிகிச்சை பிரிவில் இருந்த அவரை நேற்று முன்தினம் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அவருக்கு திட உணவுகள் வழங்குவதாகவும், நடை பயிற்சி அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்பட்டது.

இன்னும் 20 நாட்கள் வரை அவர் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்றும் இயல்பான நிலைக்கு வரும் வரை மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.