தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 28% கூடுதலாக பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோடை வெயில் சுட்டெரிக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மக்கள் வெயிலின் தாக்கத்தால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இயல்பைவிட 4, 5 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக தாக்கியது.
இதற்கிடையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இடிமின்னல் காற்றுடன் தற்போது கோடை மழை கொட்டி வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களுக்கு மழை அலர்ட் கொடுக்கப்பட்டது.
இன்று நீலகிரி, கோவை, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் 138.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த காலகட்டத்தில் இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 108.6 மி.மீ ஆகும். ஆகவே தமிழ்நாட்டில் கோடை மழை இன்று காலை வரை இயல்பை விட 28% கூடுதலாக பெய்துள்ளது.