தமிழக செய்திகள்

தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் தனது தவறான நிலைப்பாட்டை கைவிட வேண்டும்- CPI

முந்தைய அரசின் நிலைபாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கூறினார்.

தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் தனது தவறான நிலைப்பாட்டை கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த ஆட்சியின் போது பல்கலைக் கழகங்களின் வேந்தராக ஆளுநருக்குப் பதிலாக மாநில முதலமைச்சர் இருக்க வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அதை அன்றைய ஆளுநர் கிடப்பில் போட்டார். அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அன்றைய அரசு வழக்கு தொடுத்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அந்த மசோதா சட்டமானது. அச் சட்டப்போராட்டத்தின் மூலம் மாநில உரிமை நிலைநாட்டப்பட்டது.

இந்த நிலையில் தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இது குறித்த முந்தைய அரசின் நிலைபாட்டை பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என கூறியுள்ளார்.

அவரது இக்கருத்து ஒன்றிய பாஜக அரசின் மாநில உரிமைப் பறிப்பிற்கு வலுசேர்க்கிறது. எனவே அவர் தனது தவறான கருத்தியல் நிலைபாட்டை கைவிட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.