தமிழக செய்திகள்

‘டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு’ - தொகுதி மறுவரையறை தோல்வி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு!

டெல்லியின் ஆணவத்தையும், ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று (ஏப்ரல் 17) நடைபெற்ற வாக்கெடுப்பில் தொகுதி மறுவரையறை மசோதா-2026 தோல்வியடைந்தது.

இந்த மசோதாவிற்கு ஆதரவாக 278 வாக்குகளும், எதிராக 211 வாக்குகளும் பதிவாகின. இருப்பினும், இது அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா (131-வது திருத்தம்) என்பதால், நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை கிடைக்காததால் மசோதா தோல்வியடைந்தது.

இந்நிலையில் மசோதா தோல்வி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின்,

“டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு!

டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்த இந்த மசோதா வழிவகை செய்திருந்தது. தொகுதி மறுவரையறை மற்றும் 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் இடங்களை ஒதுக்குவதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைத்தே மகளிர் இடஒதுக்கீடு மசோதாவும் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததால், அதனுடன் இணைக்கப்பட்டிருந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவும் தற்போதைக்கு நிறைவேற்றப்படாமல் போனது.