சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்,"முன்னாள் முதலமைச்சர்கள் கலைஞராக இருந்தாலும், ஸ்டாலின் ஆக இருந்தாலும் செய்தித்தாளை பார்த்து காலையிலேயே தொலைபேசியில் அழைப்பார்கள்.
5 ஆண்டுகளாக நாங்கள் டென்ஷனாகவே இருந்தோம் ஆனால் நீங்கள் ரிலாக்சாக இருக்கிறீர்கள்” என்றார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் என்.ஆனந்த்,"சிறிய வாய்க்கால் பிரச்சினையாக இருந்தாலும் முதலமைச்சர் தொடர்பு கொண்டு பேசுகிறார். பிரச்சினையை சரி செய்து விட்டார்களா என்று போன் செய்து கேட்கிறார்.
உங்களுக்கு 5 வருடம்தான் டென்ஷன். ஆனால் ஒரு பயத்தோடுதான் பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு தினசரி டென்ஷன்தான் என்று கூறினார்.
இதனால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது. இந்த உரையாடலை முதலமைச்சர் விஜய் புன்னகைத்தபடி ரசித்தார்.
சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை எனவும், மாற்றம் வரும் என நினைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியதாக கூறினார்.
இதற்கு பதிலளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்,"கடந்த ஆட்சியில் ரூ.309 கோடிக்கு நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படும் என அறிவித்தது என்ன ஆனது.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் திரைக்கதை, வசனம் பேசுகிறார். விவசாயிகளுக்கு கடந்த ஆட்சியில் நெல்லைச் சேமித்து வைக்க இடமில்லாத நிலை இருந்தது. நெல் கொள்முதலில் முறைகேடுகள் நடைபெற்றதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் போட்டு நடந்து சென்ற விவசாயி குறித்தும் அவர் எதுவும் கூறவில்லை என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "தமிழக வெற்றிக் கழகம் எப்படி ஆட்சிக்கு வந்தது என சாமி அமைச்சரை பார்த்தாலே தெரிகிறது" என்றார்.
இந்து சமய அறநிலைதுறை அமைச்சரை சாமி அமைச்சர் என எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறிய நிலையில் இதனை கண்ட முதலமைச்சர் விஜய் அவையில் குலுங்கி குலுங்கி சிரித்த சம்பவம் கவனத்தை ஈர்த்தது.