தமிழக செய்திகள்

ஆம்ஸ்ட்ராங் கொலையில் சிபிஐ விசாரணைக்கு எதிரான வழக்கு - தமிழக அரசு விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய உத்தரவை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது சில கேள்விகளை நீதிபதிகள் முன் வைத்தனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ந் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்தது.

இந்த மேல் முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி ஜே.கே.மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்தனர். அதே வேளையில் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த இடைக்கால உத்தரவு தொடரும் என்றும் நீதிபதிகள் தெளிவு படுத்தினர். அதன்படி ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு ஆணைக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு தொடரும் என்பதை தெளிவுபடுத்தினர்.

மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றிய உத்தரவை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனு மீது சில கேள்விகளை நீதிபதிகள் முன் வைத்தனர்.

குறிப்பாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? சி.பி.ஐ. விசாரணைக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறதா? என்பது தொடர்பாக விளக்கம் பெற்று தெரிவிக்கும்படியும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு தரப்பில் மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா ஆஜர் ஆனார்.