தமிழகத்தில் ஆட்சி அமைக்க விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை விஜய் கோரியுள்ள நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை திருமாவளவன், சண்முகம் மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது," திமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டாம். தற்போது அவசரப்பட்டு முடிவெடுக்க வேண்டாம்" என ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன், சண்முகம், வீரபாண்டியனிடம் வலியுறுத்தியதாக கூறப்பட்டது.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிறகு விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
விஜய் என்னிடம் நேற்று தொலைபேசியில் பேசினார். அமைச்சரவையில் இடம் வழங்குவது குறித்து விஜய் பேசவில்லை.
தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. உயர்நிலை குழுவில் ஆலோசனை நடத்தியபின் முடிவை அதிகாரப்பூர்வமாக தெரிவிப்போம்.
விசிக எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முடிவை எடுப்போம். அவசர கதியில் முடிவெடுக்க முடியாது.
காங்கிரஸ் உடன் கைகோர்த்ததால் தவெகவுக்கு பாஜக நெருக்கடி கொடுத்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.