அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணியில் ஏ.சி. சண்முகத்தின் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக இயக்குநர் சுந்தர். சி அறிவிக்கப்பட்டார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின்போது சுந்தர். சியின் மனைவி குஷ்புவும் உடன் இருந்தார்.
சுந்தர். சி தனது வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்து விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி சுந்தர். சி பெயரில் ரூ. 2.97 கோடி அசையும் சொத்து, ரூ.17.7 கோடி அசையா சொத்துகள் உள்ளதாகவும், அவரது மனைவி குஷ்பு பெயரில் ரூ. 6 கோடி அசையும் சொத்துகள், ரூ. 4.17 கோடி அசையா சொத்துகள் உள்ளதாகவும் வேட்பு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுந்தர்.சியிடம் 3 கார்களும், குஷ்புவிடம் ஒரு காரும் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, பா.ஜ.க. நிர்வாகியும், நடிகையுமான குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24 கிலோ வெள்ளி பொருட்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சுந்தர் சி-க்கு 4.12 கோடி ரூபாய் கடனும், குஷ்புவுக்கு 2.74 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்.டி.ஏ கூட்டணி சார்பாக இயக்குநர் சுந்தர். சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு எதிராக சுந்தர்.சி களமிறக்கப்பட்டிருப்பதால் இத்தொகுதி கவனம் ஈர்த்துள்ளது.