திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து சுமார் 22 கிமீ தொலைவில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்கு புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர்.
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். குறிப்பாக அமாவாசை, பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். கோவிலுக்கும், பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் அதிக அளவில் வருகின்றனர். குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
நேற்று இரவு பெய்த கனமழையால் அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் நேற்று மாலை மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று பஞ்சலிங்க அருவியில் குளிக்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. தண்ணீர் வரத்தை கண்காணித்து வருவதாகவும் நிலைமை சீரானால் சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.