தமிழ்நாடு செய்திகள்

அண்ணன் 3 அடி உயரம்... தம்பி 2½ அடி உயரம்... இறப்பிலும் இணைபிரியாத வளர்ச்சி குன்றிய சகோதரர்கள்

கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஹரிஹரன் உடல் நலம் குன்றி இறந்து விட்டார்.பிறப்பில் குறையுடன் பிறந்த சகோதரர்கள் இறப்பிலும் இணை பிரியாமல் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

மாலை மலர்

சீர்காழி:

பிறப்பில் குறையுடன் பிறந்த சகோதரர்கள் இறப்பிலும் இணை பிரியாமல் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மகாராஜபுரம் ஊராட்சி தேவநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் ஹரிஹரன் (வயது 22). இவர் பிறவியிலேயே வளர்ச்சி குன்றிய 3 அடி உயரம் உள்ளவர். இவரின் இளைய சகோதரர் ஆதித்யா (21). இவரும் தனது அண்ணனை போலவே 2½ அடி உயரம் கொண்டவர். இருவரும் சேர்ந்து வீட்டின் ஒரு புறத்தில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஹரிஹரன் உடல் நலம் குன்றி இறந்து விட்டார். தனது அண்ணன் ஹரிகரன் இழப்பை தாங்க முடியாத நிலையில், அவரது தம்பி ஆதித்யா சோகத்தில் இருந்துள்ளார். இதனால் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஆதித்யாவை அக்கம் பக்கத்தினர் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

அண்ணன் இறந்த துக்கத்தில் தம்பியும் உயிரிழந்த சம்பவம் தேவநல்லூர் கிராமத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.