தமிழக செய்திகள்

SSLC| ஸ்டிரெச்சரில் படுத்தபடி 10-ம் வகுப்பு தமிழ் பரீட்சை எழுதிய மாணவர்

அவருக்கு பள்ளிக்கல்வித்துறை சிறப்பு அனுமதி வழங்கியது.மாணவருக்கு உதவ வேறொரு பள்ளியில் இருந்து ஆசிரியை வரவழைக்கப்பட்டிருந்தார்.

மாலை மலர்

சென்னை:

சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சாய் கார்த்திக் (வயது 15) இவர் தனது வீட்டு மாடியில் இருந்து இறங்கும்போது படிக்கட்டில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரது முதுகெலும்பில் (பைனல் கார்டு) பலத்த அடிபட்டதால் அவரால் உட்காரவும் நடக்கவும் முடியவில்லை. படுத்த படுக்கையில் இருந்தார்.

இந்த நிலையில் இன்று 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியதால் ஆம்புலன்சில் சென்று பரீட்சை எழுதுவதற்கு கல்வித்துறையில் அனுமதி கேட்டிருந்தார். அவருக்கு பள்ளிக்கல்வித்துறை சிறப்பு அனுமதி வழங்கியது. அதன்பேரில் மாணவருக்கு உதவ வேறொரு பள்ளியில் இருந்து ஆசிரியை வரவழைக்கப்பட்டிருந்தார்.

அதன்படி இன்று ஆம்புலன்சில் பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிக்கூடம் வந்த மாணவர் சாய் கார்த்திக் ஸ்டிரெச்சரில் படுத்த படி 10-ம் வகுப்பு பரீட்சை எழுதினார்.

தமிழ் பரீட்சை கேள்விக்கான பதிலை அவர் சொல்ல சொல்ல அருகில் இருந்து ஆசிரியை ஒருவர் விடைத்தாள் எழுதினார்.